Wednesday, December 31, 2008

உன் நினைவோடு....

ரோஜா பூவிலும்,
முத்தின் மணியிலும்,
குழந்தைகள் சிரிப்பிலும்,
தென்றல் காற்றிலும்,
தேனின் சுவையிலும்,
கடலின் அலையிலும்,
எந்தன் கண்ணீர்த்
துளியிலும்,
அன்பே..
உன் முகமன்றி வேறேது...?

இமைகளை மூடி
உறக்கத்தை தேடிடும் இரவில்
உயிருக்குள் உறங்கும்
இனியவனே- உன்னை
நாடி அன்றாடம் வாழும்
எனக்கு எஞ்சி இருப்பது
கனவுகள் - அதனால்
அவஸ்தையாகிய இரவுகள்..


அனைவருக்கும்
தூக்கத்திற்கு இடையில்
கனவுகள் வரும்
ஆனால் எனக்கோ
கனவுகளுக்கு இடையில்
தூக்கம் !!


அன்பு கொண்டதால்
மட்டுமே ஆட்டிப்
படைக்கும் அவலங்கள்...
காதல் கொண்டதால் மட்டுமே
காக்க வைக்கும் காலங்கள்.

...

Written by:Arya

Wednesday, December 24, 2008

நீ இல்லாத தருணங்கள்...

முகவரி இல்லாத கடிதம் போல்
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டு இருக்கிறேன் !

முதல் வாய் சோற்றில்
தவறாமல் புரை ஏறுகின்றன
தொலைபேசி சினுங்கையில்
உன்னை மட்டுமே நினைக்கிறேன்!

இரவு கசக்கிறது
பகல் நீள்கிறது

இந்த அண்டவெளி முழுவதும்
உன் நினைவுகளால் நிரம்பிஉள்ளன !

ஒரு ரூபாய் காசை தொலைத்த சிறுமியாய்
உன்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்
தொலைந்த இடம் தெரியாமல் !

Thursday, December 11, 2008

நினைவிருக்கிறதா?????

நீ பல வருடங்களுக்குப் பிறகு
என் வீட்டுக்கு வந்திருந்த
அந்த நவம்பர் மாத
மழை நாட்களை
உனக்கு
நினைவிருக்கிறதா?

நீ
‘மணியக்கா வீட்டுக்கு போகணும்”
என்றதும் நான் கடை கடையாகத் தேடி
கேரியர் இல்லாமல் எடுத்து வந்த
வாடகை சைக்கிளை
நினைவிருக்கிறதா?

உனக்கு தலை பின்னிக்
கொண்டிருக்கும் அம்மா
பார்க்க முடியாது என்ற
தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்
பார்த்து கண்சிமிட்டி
‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா?

ஒரு முறை
உன் நிறத்திலேயே நானும்
சட்டை போட்டுவந்து
‘பார்த்தாயா” என்று காலரை
தூக்கிவிட்டபோது பார்த்துவிட்ட
அக்காவுக்காக அடிக்கடி
காலரை தூக்கிவிட நேர்ந்ததே
நினைவிருக்கிறதா?

ஒரு திருமண வீட்டில்
‘அதோ அவர்தான்”
என்று பார்வையாலேயே
தோழிகளுக்கு என்னை
அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?

என்
முகவரியை
நானே எழுதி
உன்னிடம் தந்துவிட்ட
கடிதத்தாள்களை
நினைவிருக்கிறதா?

நீ ஊருக்கு கிளம்புகையில்
துணிகளை பெட்டியில்
அடுக்கிக்கொண்டிருந்தபோது
நான் பார்க்கவில்லை என நினைத்து
உன் மார்புக்குள் சொருகிக்கொண்ட
என் கைக்குட்டையை
நினைவிருக்கிறதா?

தொலைபேசியில்
நான் உனக்கு
முத்தம் தரும்போதெல்லாம்
பதிலுக்கு என்னசெய்வதென்று
தெரியாமல்
‘தாங்க்ஸ்” என்று வழிவாயே
நினைவிருக்கிறதா?

‘இந்த டிரஸ்
போட்டுக்கறன்னைக்கெல்லாம்
உன்னைப் பார்த்துவிடுகிறேன்”
என்று
அடிக்கடி போட்டுக்கொள்வாயே䤦lt;BR>அந்த
மாம்பழ நிறப்பாவாடையை
நினைவிருக்கிறதா?

முத்தம் கேட்டபோதெல்லாம்
‘அவங்க இருக்காங்க இவங்க பாக்றாங்க”
என்று ஏதேனும் சொல்லித் தப்பிட்டு
முதன்முதலாக
என் கவிதை பிரசுரமான அன்று
நீயாக வந்து முத்தமிட்டு
ஓடினாயே
நினைவிருக்கிறதா?

ஓரே ஒரு முறை என்று
என் சிகரெட் பிடுங்கி
புகைபிடித்து நீ இருமியபோது
பார்த்துச் சிரித்த
அந்த வழிபோக்கன் முகம்
நினைவிருக்கிறதா?

மின்சாரம் போனபோதெல்லாம்
உன் பாட்டியின்
காதில் விழாமல்
எனக்குக் கிடைத்த
சத்தமில்லா முத்தங்களை
நினைவிருக்கிறதா?

துணி உலர்த்த மாடிக்குப்
போகும்போதெல்லாம்
‘ஏண்டி இப்படி ஊருக்கே
கேக்குறமாதிரி கத்தற”
என்று உன் அம்மா திட்டுவாங்களே
நினைவிருக்கிறதா?

‘சரியாகச் சொன்னால் முத்தம்” என்று
முதுகில்
விரலால் எழுதி
விளையாடியதில்
எத்தனை முறைத் தோற்றேன் என்று
நினைவிருக்கிறதா?

முதன்முதலில்
நீ என்னுடன்
வண்டியில் வந்தபோது
என்மேல் பட்டுவிடாமல்
எவ்வளவு கவனமாக
அமர்ந்துவந்தாயென்று
நினைவிருக்கிறதா?

அதே வண்டியில்
‘என்ன அவசரம்
சுற்று வழியில்
மெதுவாகப் போ” என்று
தோளில்
சாய்ந்துகொள்வாயே
நினைவிருக்கிறதா?

நாளிதழ் வந்ததும்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
வார பலன்கள்
பார்ப்போமே
நினைவிருக்கிறதா?

உன் - அக்கா கல்யாணத்தில்
‘அடுத்த கல்யாணம் இவளுக்குத்தானே”
என்று யாரோ சொன்னபோது
ஏனோ என்னைக் கள்ளத்தனமாகப்
பார்த்தாயே ஒரு பார்வை
நினைவிருக்கிறதா?

இவற்றையெல்லாம் எப்போதும்
நினைவில் நிறுத்திக்கொள்ள
என்ன செய்யலாம் என யோசித்து
எனக்கு நீ
பரிசளித்த பேனாவை
நினைவிருக்கிறதா?

-ஒளிப்பதிவாளர் எஸ்டி.விஜய்மில்டன்

Tuesday, November 25, 2008

'தாய்' - சிறுகுறிப்பு வரைக

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!"

-
மின்னஞ்சலில் நண்பன் பகிர்ந்துக்கொண்ட கவிதை

Wednesday, November 19, 2008

ஓர் இரவு.....போதுமா??

இரவெல்லாம்
பேச வேண்டும்,
கனவுகளை,
கண்ணீரை,
கவிதையை,
ஏமாற்றத்தை,
எழுச்சியை,
துயரத்தை…..
எல்லாவற்றையும்..
ஊர் உறங்கிப்போன பிறகும்
உன்னை கேட்டபடி நானோ..
என்னை கேட்டபடி நீயோ…
நெட்டி தள்ளும்
உறக்கத்தோடு
நான்
உன் மடியிலோ
நீ
என் மடியிலோ
கண்ணயர வேண்டும்…
காலமெல்லாம் இது வேண்டும்!!!

Tuesday, November 11, 2008

உன்னாலே !.....உன்னாலே !

நீ எழுதுவதாலேயே ...
நான் உன் கவிதைகளை படித்தேன் !

நீ எதைப்பற்றி எழுதினாலும் ...
அது என்னைபற்றித்தான் என்று நினைத்தேன் !

ஓர் நாளாவது ...
உன் எழுதுகோளாக மாட்டேனா என்று தவித்தேன் !
அட அந்த தாளாகவாவது ,
என்னை நினைத்துக்கொள்ள மாட்டாயா என்று துடித்தேன் !

உன் நினைவுகள் ...
என்னை வாட்டுவதை நானே கொஞ்சம் ரசித்தேன் !
உன்னாலேயே ...
நான் இந்த கவிதையை எழுதி முடித்தேன் !

Wednesday, November 5, 2008

என் கனவுலகில்.....

நம் இருவருக்கான உலகம் இது...
இங்கு விடியலே இல்லை...
இரவு மட்டும் தான் ...
இருபத்தி நான்கு மணிநேரமும்...

நான் காத்துக் கொண்டிருப்பேன்...
தங்களின் வருகைக்காக...
கனவுகளில்...!!
காலமெல்லாம் நான் ரசிக்கும் தங்கள்...
முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன்!
சமைப்பேன், துவைப்பேன், துடைப்பேன்...
என் கனவுலகில்...
தங்கள் இல்லத்தரசியாய்!!!

என் கவிதைகளைக் கொடுப்பேன்...
உங்கள் விமர்சனத்தைக் கேட்பேன்...
உங்கள் கவிதைகளை படிப்பேன்...
ரசிப்பேன்...

நம் இருவருக்கான இந்த உலகம்...
எப்போதும் இரவாகவே இருக்கட்டும்...
விடியவே வேண்டாம்...!!

Monday, September 29, 2008

காதலிடம் யாசிக்கிறேன.....!

உனக்கு பிடிக்காது என்பதால்
நான் இழந்தவைகளும் ....
எனக்கு பிடிக்கும் என்பதால்
நீ கற்றுக்கொண்டவைகளும் மட்டுமே
நம் காதலை வலுப்படுத்தவில்லை...

நமக்கான வாழ்வின்
பரஸ்பர நம்பிக்கையும் - புரிதலுமே
நம் காதலை மேலும் அழகாக்கியது...

எனக்கான உன் தவிப்பும்...
உனக்கான என் அக்கறையும்...
நம் காதலை இன்னும் மெருகேற்றுகிறது...

உன் மீதான என் பொய் கோபமும்
என் மீதான உன் பொய் சண்டையும்
நம் காதலை இன்றும் வாழவைக்கிறது...


இப்படியே தொடரும் நம் காதலில்
உன் மடி மீது
என் உயிர் பிரியும்
வரம் வேண்டி
நம் காதலிடம் யாசிக்கிறேன்!

-
எழுதியவரின் பெயர் தெரியவில்லை.

Friday, September 12, 2008

அம்மா நீ எங்கே?

வான் இருக்கும்
வட்ட நிலா
தேன் தர
கிட்ட வரச்சொல்லி
உணவூட்டிய உன்
கைகள் எங்கே?

பூமி தொடும் புடவைதனை
பாதி தூக்கி மீதியில்
எனைத் தாங்கி
நீராட்டிய உன்
கால்கள் எங்கே?

கல்யாணம் காதுகுத்து
புதுமனைப் புகுவிழா
பூப்புனித நீராட்டு விழா
எங்கு சென்றாலும்
எனக்கென உனக்களித்த
இனிப்பினை இடுப்பில்
முடிந்து எடுத்து வருவாயே
இன்று எங்கே நீ?

அடுத்த வீட்டுப் பையன்
மண்டை உடைத்து
ஒன்றும் அறியாப் பிள்ளையாய்
‘ அடிக்கதம்மா அப்பாகிட்ட
சொல்லிடாதம்மா ‘
என்று பதுங்கி பதுங்கி
என் முகம் மறைத்த
உன் முந்தானை எங்கே?

அம்மை பார்த்து
வெம்மை பூத்து
விம்மி நான் அழுதபோது
வேப்பிலை விசிறி
உடனழுத உன்
கண்கள் எங்கே?

காய்ச்சல் வந்து
கடும் குளிரில்
கண்ணயர்ந்து நான் தூங்க
கட்டிலருகே கண்விழித்து
கண் துயிலாதெனக்கு
மருந்தூட்டிய மாசில்லாத
உன் முகமேங்கே?

பார்த்துப்போ பார்த்துப்போ
எனப் பலநூறு முறை
பாசமுடன் கூறுவாயே
பத்து நாள் கழித்துப் பார்த்தாலும்
‘என்னடா இப்படி இளைச்சுப்போயிட்ட’
என்று ஏங்குவாயே
எங்கே அந்த ஏக்கம்?

உன் விரல் பிடித்து
ஊர்வலம் வரவேண்டும்
உள்ளன்போடு நீ ஊட்டும்
உணவு வேண்டும்
தலைசாய உன் மடி வேண்டும்
தலைகோத உன் விரல் வேண்டும்

கண்ணயர்ந்து நீ தூங்க
உன் கால் பிடித்து விடவேண்டும்
அதிகாலையில் எழுந்து
காபியுடன் உனை எழுப்ப வேண்டும்

பின்னிருக்கையில் உனையமர்த்தி
அமர்க்களமாய் ஊர் சுற்ற
ஊர்தி வேண்டும்
பாலூட்டிய உனக்கு நான்
பாசமுடன் சோறூட்ட வேண்டும்

பழைய துணி அணியும் உனக்கு
பட்டுத்துணி பரிசளிக்க வேண்டும்
உன்னோடிருக்கும் புகைப்படமொன்று
உன்னுயரத்தில் என்னறையில் வேண்டும்

என்மடி மேல் உனை வைத்து
தாலாட்டிக் காலாட்ட வேண்டும்
பெரியதாய் வீடு கட்டி
பெற்றவளே! அதற்கு உன்
பெயர் சூட்ட வேண்டும்

பத்துத் திங்கள் வயிற்றிலும்
பலநூறு திங்கள் மனதிலும்
மாறி மாறி சுமந்த
உன் சுமை இறக்க வேண்டும்

மங்கலான பார்வைக்கு
தங்க முலாமிட்ட
மூக்குக் கண்ணாடி வேண்டும்

மூப்பால் முக்தியடைந்த
உன் பற்களுக்கு பதிலாய்
செயற்கை பல் பொருத்த வேண்டும்

நான் பிடித்து நடந்த
உன் கைகளுக்கு தங்கத்தில்
வளையல்கள் வேண்டும்
என் குரலைக்கேட்டு களித்த
உன் காதுகளுக்கு வைரக்கம்மல் வேண்டும்

பட்டது போதுமாம்மா
நீ இது வரை…
நீ இட்டதம்மா என் வாழ்க்கை

பார்த்துக்கொள்வேன் இனி உனை
என் பிள்ளை போல் என்றென்றும்
ஏக்கம் வேண்டாம்
தூக்கம் கொள் நிம்மதியாக…

-
எழுதியவர் கவிஞர் சரவணன்.

Monday, September 8, 2008

ஏன்?

அப்போது..
நான்
கவிதையெழுதி
காதலிக்கவில்லை
அவனை

மனித மந்தைகளின்
சூட்சம வலையில்
சிக்கிதவித்த போது
தந்தையின் வாசத்தை
அவன் மடியில் உணர்ந்து
என்
எண்ணக்குதிரையை
எனக்கே அரியாமல்
விரட்டியடித்து,

வெற்றியின் சுவையை
அரியவவைத்தவன்
அவன்..

கனவு என்பதை
கவிதையாக
காணச்செய்தவன்…

புள்ளியில் தொடங்கி
அழகான கோலத்தில்
முடிக்கும் திறமையை
சிற்பியாக இருந்து
செதுக்கி ரசித்தவன் அவன்…

வெயிலின் அருமையை
வெயிலில்லேயே உணரச்சொன்னவன்..
கொட்டும்
ஒற்றை மழைத்துளியை
கயிரெனக்கொண்டு
வானமடையும் வித்தையை
சொன்னவன்..

என் மூச்சே
அவனென்றிருக்க
ஒருநாள்
அவன் சுவாசிப்பதை
நிறுத்திக்கொண்டான்..

ஏன்? எதனால்?
என்று அறியும்
தைரியமில்லாமல்
காலத்தின்
கட்டளையாக
அவனின்
எண்ணக்குதிரையில்
பயணித்துக்கொண்டு…
கவிதைகளும் எழுதுகின்றேன்
இப்போது...

Wednesday, September 3, 2008

ஏதேதோ...நினைவு!

எங்கெங்கோ.....
பிறந்தோம்!

எங்கெங்கோ
வளர்ந்தோம்!

ஆயினும் நாம்
ஒன்றாக பயணித்த
சில நினைவுகள்.....!

தினம் தினம்
வந்து போகின்ற
பேருந்து வரலாம்
வராமல் போகலாம்
வழித்தடமும் மாறலாம்
ஆனால்

நீ மட்டுமே.....
வந்து வந்து போன
சில நினைவுகள்.....!
மனம் விட்டு
பேசிய சில வார்த்தைகள்
வாய்விட்டு சிரித்த
சில நேரங்கள்

உதட்டளவு உறவினை
உதறித் தள்ளிவிட்டு
உள்ளத்தளவில்
உறவினை வளர்த்து
உயிர் வாழ்வோமெனச் சொன்ன
உன் நினைவுகளால்.....!

மறக்க முடியாத
உறவுகளைச் சுமந்து
ஊனமாய் போன உடம்புடன்
நான் மட்டும்
நித்திரை இல்லாத
நினைவுகளோடு.....
இன்னும்

Monday, August 25, 2008

காதல் தோற்குமா??

எப்படி முடிந்தது ?
என்று முறிந்தது ?
நமக்குள் பிளவும்
தொடர்புக்கு முற்றுப் புள்ளியும்
உண்டானது நிஜமா?

மனசுக்குள் நினைவுகளும்
நினைவுகளின் அலைகளும்
என்றாவது அடங்குமா?
கண்களால் பரிமாறிக் கொண்டதும்
விரல்களால் உணர்ந்ததும்
உதடுகளால் எதிரொலித்ததும்
அழிந்தா போய்விடும் ?

நேற்று மனனம் செய்தது மறந்தாலும்
நீ காற்றுவாக்கில் பேசியது கூட
இன்னும் மனதில் அழியாமல்
கனன்று கொண்டிருப்பதை அறிவாயா?

நீயும் நானும்
தூரங்களால் விலகியிருக்கலாம்...
துயரங்களால் திசைமாறியிருக்கலாம்..
சந்தர்ப்பதால் பிரிந்திருக்கலாம்..
ஆனால்...
காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...

எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...
ஆம்..
காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்ப்பதில்லை....

-சுடர்விழி

Saturday, August 23, 2008

என் மனதில் நீ

மழை சிந்தும் வேளையில்
உன் கைகளில் மழை ஏந்து...
எந்த அளவு துளிகளை சேர்கிறாயோ
அந்த அளவு
நான் இருக்கிறேன் உன் மனதில்....
எந்த அளவு
துளிகளை சிதறுகிறாயோ அந்த அளவு
நீ இருக்கிறாய் என் மனதில்.....


-நட்சத்திரா

நேசிப்பு...

நேசிப்பும் சேமிப்பும்
ஒரு வகையில் ஒன்றுதான்
அளவு கூடினால் பகைமை
குறைந்தால் வருமை
அளவோடு நேசி
நட்புக்காற்றை சுவாசி
இந்த கவிதையை வாசி
சரியா தவறா என யோசி...


எழுதியவர்,
நட்சத்திரா.

Saturday, August 16, 2008

உன் நினைவுகளில்...

மின்னும் உன்
புன்னகையால்
என் கவலைகள்
கலைந்து போவதில்

பணிவான உன்
பாசத்தால் என்
தந்தையில்லா சோகம்
மறந்து என் மனம்
குழந்தையாவதில்...

இதைவிட
சின்ன சின்ன குறும்புகளில்

செல்லச்
சண்டைகளில்

கொஞ்ச நேர
மெளனங்களில்

கூடி சேரும்
பொழுதுகளில்

இடைவிடாத
உன் நினைவுகளில்...

இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ

இந்த உலகில் நானும்
அனாதை என்பதை
மறக்கடித்துவிடுகிறாய்.

Thursday, August 14, 2008

பாதை அறியாப் பாதங்கள்

உணவை மறந்தேன்,
உடலை மறந்தேன்,
உள்ளிருந்து அழும்
உயிரோசையை மறந்தேன்.
காலத்தை மறந்தேன்,
கண்களை மறந்தேன்,
கண்மணிக்குல் ஒளிந்திருந்தக்
கணவையும் மறந்தேன்.

காற்றுக்குக் கூட
கட்டுப் படாத நான்,
கார்ட் போர்டால் ஆன
க்யூபிக்கலுக்குள் கட்டப்பட்டேன்.

தாய்ப்பாசம் கூடத்
தவணை முறையில் தான்
தினமும் பில் எகிற
தடவிக்கொண்டே செல் ஃபோனில்
சும்மா நச்சூன்னு இருந்தது
சூப்பர்வைசரின் ஈ- மெயில்.
“லீவ் அப்ரூவ் ஆயிடுச்சுடா மாமு..”
லேட்டஸ்ட் நியூஸ் செல்லில் பறந்தது.

எப்ப போகலாம், எப்ப போகலம்
என்ற படி இளித்தது…
எப்பவோ திறந்து போடப்பட்ட
என்னுடைய ‘ட்ராவல் பேக்’.
எப்படி மறக்க முடியும்,
எகிறி குதித்து விளையாடிய
என் வீட்டு முற்றத்தை,
எதிர் வீட்டு தின்னையை.
படுத்துறங்கிய தாய் மடியை,
பட்டம் விட்ட மாடியை…
பாசத்துடன் வளர்த்த நாயை
பக்கத்து வீட்டு ஜன்னலை.

‘ஏய் எரும!ஏன்டா இத்தன நாள்?
என்னடா வாங்கிட்டு வந்த..?’
எனப்பாசமுடன் வினவும்
என் உடன் பிறப்புகள்…
எப்படி தம்பி இருக்க? என
எட்டி வந்து கேட்கும்
எதிர் வீட்டுக் குடும்பத்தார்.
என்மீது இவ்வளவு அக்கறை.?
ஒரே ஒரு நாள் கூட
ஒரு நிமிடம் போலிருந்தது.
ஓடிப்போனதே தேரியவில்லை
ஒரு வார விடுமுறை.

கண்முன்னாடியே நிற்கிறாள் இன்னும்.
கையசைத்த படி நின்ற அம்மா.
டெபிட் கார்டே வைத்திருக்கும் எனக்கு
டிக்கட் வாங்கி வழியனுப்பிய அப்பா.

மறுநாள் காலை…
மீண்டும் கேன்டீன் சாப்பாடு,
மாட்டேன் என்றது
மறத்துப் போன என் நாக்கு.
அப்போது தான் உறைத்தது
அட்டுப் போன என் மனதுக்கு
நான் மறந்தது,
உணவை மட்டுமல்ல
உணர்வையும் சேத்துத்தான் என்று!
—————————————————
இப்படிக்கு என்றும் உங்கள்,
முகவரியோடு
முகத்தையும் சேர்த்து
மாற்றிக்கொண்ட
மென் பொருள் வள்ளுனர்களில் ஒருவன்.
—வெரொனிக்.

Wednesday, August 13, 2008

Sunday, August 10, 2008

சந்திக்காமலே இருந்திருக்கலாம்.....

நான் நானாகவே
இருந்திருக்கலாம்

நீ நீயாகவே
இருந்திருக்கலாம்

எனக்கு நீயும்
உனக்கு நானும்
யாரோ என்றே
வாழ்ந்திருக்கலாம்

நான் உன்
எழுத்துக்களை
ரசிக்காமல்
போயிருந்தால்

நீ என்னை
நட்போடு
பார்க்காமல்
போயிருந்தால்

இப்படி அன்பில்
திளைத்து
ஒன்றுக்குள் ஒன்றாக
நட்புடன் பழகிவிட்டு

ஒவ்வொன்றாக வலியோடு
பிரியாமல் போயிருப்போம்.

Friday, August 8, 2008

தந்தையும் நானும்..

பார்த்து பார்த்து
தேந்தெடுத்த உடைகள்..
பத்தியமாய் செய்த உணவு..
பார்த்து மகிழ
தொலைக்காட்சி, இணையம்
இன்னும் பிற..
இறுமாப்புடன் கேட்டேன்
தந்தையை பார்த்து,
இன்னும் என்ன வேண்டும்
உங்களுக்கு?
"எனக்காக நீ செலவிடும் நேரம்"
இடியாய் வந்திறங்கியது
பதில்.

- இலட்சுமி சுந்தர்

Wednesday, July 30, 2008

பிரியுமா......பிரியம்??

பிரியம் என்பது எளிதல்ல, குறிப்பாக
பிரிந்திருக்கும் தொலை தூரத்தில்.

சந்தேகங்களும் பயங்களும் சாதாரண உறவினிடை
கொந்தளித்துக் கொண்டிருக்கும் பிரிந்திருந்தால்...

இமைப்பொழுதில் உனை நினைக்கையில்
என்றுமில்லாத எதனையோ இழக்கின்றேன்...
உன் புன்னகையின் மெல்லினத்தை,
உன் அன்பின் ஆழத்தை,
உன் பாசமிகு கரத்தை!

உன்மேல் நான் கொண்ட அன்பு எத்துனை
வலிமையானது என்பதனை
உன்னிடம் நிரூபிக்க விடாமல் இந்த தூரமும்
என்னை தொந்தரவு செய்கிறது...

Wednesday, July 23, 2008

இனிய கவிதை....

அம்மா....

சுமையைச் சுகமாக்கி
சுமந்து சுகமடைந்தாய்
உதிரத்தை அமுதாக்கி
உயிரூட்டினாய்
பத்தியச் சோறுண்டு
பாதுகாத்தாய்

முதல் உறவாய்
முதல் குருவாய்
முதல் இறையாய்
நிறைந்தாய்

என் உணர்வே
உன் உயிராய்
என் உறவே
உன் உலகாய்
மா(ற்)றினாய

கைமாறில்லாக் கடனாற்றி
கடனாளியாக்கிவிட்டாய்
பாசம் பொழிந்து மழையானாய்
எனைக் காக்க நெருப்பானாய்
சிறகடிக்க விண்ணானாய

தன்னலமற்ற தாயே...
நீயின்றி நானில்லையே
ஆயிரம் உறவுகள்
கொண்டாலும்
உனக்கு இணை இல்லையே...


கடவுள் கண்முன் வந்தால்
கேட்பேன் ஒரே வரம்
"மீண்டும் உன் கருவறையில்
ஓர் இடம்"

Thursday, July 17, 2008

உன் நினைவுகள்....

உன் வரவினை
எதிர்பார்த்தே வாழ்ந்தவள்
இனிவரவும் இல்லை...
செலவும் இல்லை!


இனி நிறைய நேரமிருக்கும்
உன்னால் மறந்துபோன
என்னை நினைத்துக்கொள்ள
கண்கள் நனைத்துக்கொள்ள!


நீ சொல்லியோ
நான் சொல்லியோ
ஒன்றும் ஆகப்போவதில்லை
கிடக்கட்டும் என்னுள்
உன் நினைவுகள்
மட்டுமேனும்!

- எழுதியவரின் பெயர் நினைவில் இல்லை

Wednesday, July 16, 2008

அன்பு மகளே......கண்மனி!!

என் அன்பு மகளே...

என் விடியல்
என்றும் உனக்கானது...

என் உள்ளத்தின்
உற்சாகம்
உன் புன்னகையில்...

ஆனால் புதிதாகவும்,
நான் காணும்போது
புதிராகவும்
மறைக்கப்படும்
உன் நாணம்...

என்னுடனான
உன் நட்பு
இன்று
எல்லைகளுடன்...

நீ உதறிவிட்ட
என் நினைவுகள்
அனாதைகளாய்
என் முன்னே...

தனிமையில்
கனவுகள் காண்கிறாய்...
உறக்கம், உணவு
தொலைக்கிறாய்
உண்மை கேட்டால்
வெடிக்கிறாய்...

காதல் கனவுகளில்
காலத்தைத்
தொலைத்து விடாதே..
கானல் நீராக
காணாமல் போய்விடாதே...

காலச்சக்கரத்தில்
உண்மைக்காதல்
உன்னைத்தேடி வரும்...
வாழ்க்கைச்சக்கரத்தில்
தேடும்போது வாராது
இளமைப்பருவம்...

அன்னை என்
அழுகுரல்
கேட்கிறதா கண்மனியே???

-கவிஞர் மலர்

இணை பிரியா இணைய நட்பு !!!

என் கவிதை ரசனைக்கு
நவரசமாய் கிடைத்தது - ஒரு
இணைய நட்பு!

கவிதைக்கு மட்டுமில்லை
நண்பா! - கலங்கிடாதே
கண்ணுக்குள் மணியாய்
இணை பிரியா நட்பு
இந்த இணைய நட்பு!!

"கருத்து வேறுபாடு ஒன்றும்
தடையில்லை நம் நட்புக்கு!"
கிடைத்த உன் நட்பு எனக்கு
பொக்கீஷம்
கடவுளுக்கே என் முதல் நன்றி!

கவியில் இன்னும் நடைபழகும்
குழந்தைதான் நான்! - ஆனாலும்
காத்திருந்து கிடைத்த உன் நட்புக்கு
தந்தேன் கவிதையை பரிசாய் உனக்கு!

சண்டை போடவா
நம் நட்பு??
இல்லை
திட்டிக்கொள்ளவா? -
இரண்டுமே நம் நட்பினை வெளிப்படுத்த
நாம் கூறிக்கொள்ளும்
சாக்குபோக்கு!!

-திருமதி. அஸ்மா