Wednesday, April 22, 2009

அம்மா, வருவாளா???

பசிக்கிறது...
அழும் சத்தம்
களை எடுக்கும் அம்மாவின்
காதில் விழுமோ
மரத்தின் கிளையில்
சேலை கட்டித் தொங்கவிட்டு
தூங்கவைத்து போன அம்மா...

நிழலில் நான்...
வெயிலில் உருகி உருகி
அம்மா தினமும்
வேகும் நினைப்பு வரும்
வரும் அழுகையை அடக்கியே
அமைதியாகிப் போவேன்
ஆடாத தொட்டில்
உச்சி வெயில் அடிக்க
உறங்கியது போல இருப்பேன்
ஓடி வந்து பார்ப்பாள்
ஓரக்கண்ணால் ரசிப்பேன்
பசிக்குமே பிள்ளைக்கு என
என்னைத் தூக்கி
மார்போடு அணைக்கையில்
எனக்கு கண்ணீர் முட்டும்...

உலகத்தில் உள்ள
குழந்தைகளுக்கெல்லாம்
ஒரு தாய் இருக்கக்கூடாதோ
ஆதரவற்ற பிஞ்சுகளை
நினைத்து என் நெஞ்சு
கனத்துப் போகும்
மொழி பேசத் தெரிந்ததும்
அம்மாவிடம் இதைதான்
கேட்கவேண்டும் என இருக்கிறேன்
அம்மா இல்லாத பிஞ்சுக்கெல்லாம்
அழுதபோதாவது அம்மா வருவாளா...

---

Written by: Venkadarengan

Thursday, April 9, 2009

நட்பின் ஆழம்...!

ஒவ்வொரு நாளும்
தொடர்வண்டி பயணச்சீட்டு
எடுக்கும் வேளையெல்லாம்
நினைப்பதுண்டு
இன்றாவது உன்னை
சந்திக்கமாட்டோமா என்று

என்றாவது ஒருநாள்
நாம் சந்திக்கும் போது
நிற்க நேரமின்றி
பேசிக்கொள்ள வேண்டும்
இருவரில் ஒருவரேனும்

இல்லாதபோதும் தேடி
எடுத்த இரண்டு நிமிடத்தில்
இரண்டாண்டு நினைவுகளை
இரத்தின சுருக்கமாக
பரிமாற வேண்டும்

இரண்டாவது நிமிடத்தின்
கடைசி நொடியில்
உனது கைப்பையில்
தேடியும் கிடைக்காத காகிதத்தால்
என்றாவது இதுபோல்
பயன்பெற வேண்டுமென்று
எனது பையில் சேகரித்த
பயணசீட்டில்
பரிமாறிக்கொள்ள வேண்டும்
ஒருவரின் தொடர்புக்காண
எண்ணை மட்டும்

எனது விருப்பமெல்லாம்
இதுதான்…..
கேட்பது நீயாக இருக்க வேண்டும்
கொடுப்பது நானாக இருக்க வேன்டும்
அப்பொழுதுதான்
உன் மீதான என் நட்பின்
ஆழம் அறியப்படும் !

-அமைதிப்ரியன்