Wednesday, January 21, 2009

குரல் கேட்காதா ?

எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை,

இன்னும் உறங்கும் நண்பன்,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,

நாளைய காலையின் விழிப்பிலாவது

தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு…..



இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

மென்பொருள் வல்லுனன்.

Wednesday, January 14, 2009

என் காதலே!.......என் காதலே!!

குட்டி குட்டி கோபங்கள்
சின்ன சின்ன சண்டைகள்
ரசிக்கவைக்கும் ஊடல்கள்
ஏங்க வைக்கும் கொஞ்சல்கள்
மிஞ்சவைக்கும் கெஞ்சல்கள்..
இன்னும் எத்தனை எத்தனை
இன்பம் வைத்திருக்கிறாய்
என் காதலே... ? !

Saturday, January 10, 2009

அப்பா....

ஆயிரம் முறை
தலைவாரிய
சந்தோஷம்...
அப்பா
ஒரேயொருமுறை
தலை கோதிவிடும்
போது!!

மனசுக்குள்
லேசாக பதறினாலும்
எது காட்டிக்கொடுக்கிறது
அப்பாவிற்கு மட்டும்????

ஒரே பார்வையில்
நானிருக்கிறேன் உனக்கென்று
உணர்த்த எப்படி முடிகிறது
அப்பாவிற்கு மட்டும்???

இத்துனை புரிதலும்
பரிவான பாசமும்
காட்டுகிறாயே...
எந்தப் பாசப்படியை
கொண்டு அளந்து
பார்ப்பேன்..?

அளந்திடத்தான் முடியுமா
அப்பா காட்டும் அன்பை!!!

-----

நண்பர் 'நட்புடன் ஜமாலின்' வேண்டுகோளுக்கு இணங்க.......என் வலைதளத்தில் 'என் வசம் ....நானில்லை' தொடர் கதைக்காக எழுதிய கவிதையை இங்கே பகிர்கிறேன்.

Monday, January 5, 2009

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

சிரித்துக்கொண்டே நீ பேசிய
நம் முதல்
தொலைபேசி உரையாடல்.......

அழகான வரிகளோடு
மின்னஞ்சலில் நீ
அனுப்பிய வாழ்த்து அட்டைகள்...

வார்த்தைகளை தேடிபிடித்து
ஆறுதலாக எழுதின
உன் கவிதை தொகுப்புகள்....

என் வெக்கத்தைப் பற்றி
கவி எழுதி என்னை
வெட்கப்பட வைத்த வரிகள்....

நேரம் போவதறியாது
விரல்கள் வலிக்க வலிக்க
டைப்படித்த நீண்ட நேர அரட்டைகள்..

அவசரத்தில் அனுப்பிய மின்னஞ்சல்,
யோசித்து யோசித்து
எழுதியனுப்பிய நீண்ட இமெயில்கள்.......

என நமக்குள் நடந்தது
அனைத்தையும் பொத்தி பொத்தி
வைத்திருக்கிறேன் என் காதல் கருவறையில்!!!

Wednesday, December 31, 2008

உன் நினைவோடு....

ரோஜா பூவிலும்,
முத்தின் மணியிலும்,
குழந்தைகள் சிரிப்பிலும்,
தென்றல் காற்றிலும்,
தேனின் சுவையிலும்,
கடலின் அலையிலும்,
எந்தன் கண்ணீர்த்
துளியிலும்,
அன்பே..
உன் முகமன்றி வேறேது...?

இமைகளை மூடி
உறக்கத்தை தேடிடும் இரவில்
உயிருக்குள் உறங்கும்
இனியவனே- உன்னை
நாடி அன்றாடம் வாழும்
எனக்கு எஞ்சி இருப்பது
கனவுகள் - அதனால்
அவஸ்தையாகிய இரவுகள்..


அனைவருக்கும்
தூக்கத்திற்கு இடையில்
கனவுகள் வரும்
ஆனால் எனக்கோ
கனவுகளுக்கு இடையில்
தூக்கம் !!


அன்பு கொண்டதால்
மட்டுமே ஆட்டிப்
படைக்கும் அவலங்கள்...
காதல் கொண்டதால் மட்டுமே
காக்க வைக்கும் காலங்கள்.

...

Written by:Arya

Wednesday, December 24, 2008

நீ இல்லாத தருணங்கள்...

முகவரி இல்லாத கடிதம் போல்
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டு இருக்கிறேன் !

முதல் வாய் சோற்றில்
தவறாமல் புரை ஏறுகின்றன
தொலைபேசி சினுங்கையில்
உன்னை மட்டுமே நினைக்கிறேன்!

இரவு கசக்கிறது
பகல் நீள்கிறது

இந்த அண்டவெளி முழுவதும்
உன் நினைவுகளால் நிரம்பிஉள்ளன !

ஒரு ரூபாய் காசை தொலைத்த சிறுமியாய்
உன்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்
தொலைந்த இடம் தெரியாமல் !

Thursday, December 11, 2008

நினைவிருக்கிறதா?????

நீ பல வருடங்களுக்குப் பிறகு
என் வீட்டுக்கு வந்திருந்த
அந்த நவம்பர் மாத
மழை நாட்களை
உனக்கு
நினைவிருக்கிறதா?

நீ
‘மணியக்கா வீட்டுக்கு போகணும்”
என்றதும் நான் கடை கடையாகத் தேடி
கேரியர் இல்லாமல் எடுத்து வந்த
வாடகை சைக்கிளை
நினைவிருக்கிறதா?

உனக்கு தலை பின்னிக்
கொண்டிருக்கும் அம்மா
பார்க்க முடியாது என்ற
தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்
பார்த்து கண்சிமிட்டி
‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா?

ஒரு முறை
உன் நிறத்திலேயே நானும்
சட்டை போட்டுவந்து
‘பார்த்தாயா” என்று காலரை
தூக்கிவிட்டபோது பார்த்துவிட்ட
அக்காவுக்காக அடிக்கடி
காலரை தூக்கிவிட நேர்ந்ததே
நினைவிருக்கிறதா?

ஒரு திருமண வீட்டில்
‘அதோ அவர்தான்”
என்று பார்வையாலேயே
தோழிகளுக்கு என்னை
அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?

என்
முகவரியை
நானே எழுதி
உன்னிடம் தந்துவிட்ட
கடிதத்தாள்களை
நினைவிருக்கிறதா?

நீ ஊருக்கு கிளம்புகையில்
துணிகளை பெட்டியில்
அடுக்கிக்கொண்டிருந்தபோது
நான் பார்க்கவில்லை என நினைத்து
உன் மார்புக்குள் சொருகிக்கொண்ட
என் கைக்குட்டையை
நினைவிருக்கிறதா?

தொலைபேசியில்
நான் உனக்கு
முத்தம் தரும்போதெல்லாம்
பதிலுக்கு என்னசெய்வதென்று
தெரியாமல்
‘தாங்க்ஸ்” என்று வழிவாயே
நினைவிருக்கிறதா?

‘இந்த டிரஸ்
போட்டுக்கறன்னைக்கெல்லாம்
உன்னைப் பார்த்துவிடுகிறேன்”
என்று
அடிக்கடி போட்டுக்கொள்வாயே䤦lt;BR>அந்த
மாம்பழ நிறப்பாவாடையை
நினைவிருக்கிறதா?

முத்தம் கேட்டபோதெல்லாம்
‘அவங்க இருக்காங்க இவங்க பாக்றாங்க”
என்று ஏதேனும் சொல்லித் தப்பிட்டு
முதன்முதலாக
என் கவிதை பிரசுரமான அன்று
நீயாக வந்து முத்தமிட்டு
ஓடினாயே
நினைவிருக்கிறதா?

ஓரே ஒரு முறை என்று
என் சிகரெட் பிடுங்கி
புகைபிடித்து நீ இருமியபோது
பார்த்துச் சிரித்த
அந்த வழிபோக்கன் முகம்
நினைவிருக்கிறதா?

மின்சாரம் போனபோதெல்லாம்
உன் பாட்டியின்
காதில் விழாமல்
எனக்குக் கிடைத்த
சத்தமில்லா முத்தங்களை
நினைவிருக்கிறதா?

துணி உலர்த்த மாடிக்குப்
போகும்போதெல்லாம்
‘ஏண்டி இப்படி ஊருக்கே
கேக்குறமாதிரி கத்தற”
என்று உன் அம்மா திட்டுவாங்களே
நினைவிருக்கிறதா?

‘சரியாகச் சொன்னால் முத்தம்” என்று
முதுகில்
விரலால் எழுதி
விளையாடியதில்
எத்தனை முறைத் தோற்றேன் என்று
நினைவிருக்கிறதா?

முதன்முதலில்
நீ என்னுடன்
வண்டியில் வந்தபோது
என்மேல் பட்டுவிடாமல்
எவ்வளவு கவனமாக
அமர்ந்துவந்தாயென்று
நினைவிருக்கிறதா?

அதே வண்டியில்
‘என்ன அவசரம்
சுற்று வழியில்
மெதுவாகப் போ” என்று
தோளில்
சாய்ந்துகொள்வாயே
நினைவிருக்கிறதா?

நாளிதழ் வந்ததும்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
வார பலன்கள்
பார்ப்போமே
நினைவிருக்கிறதா?

உன் - அக்கா கல்யாணத்தில்
‘அடுத்த கல்யாணம் இவளுக்குத்தானே”
என்று யாரோ சொன்னபோது
ஏனோ என்னைக் கள்ளத்தனமாகப்
பார்த்தாயே ஒரு பார்வை
நினைவிருக்கிறதா?

இவற்றையெல்லாம் எப்போதும்
நினைவில் நிறுத்திக்கொள்ள
என்ன செய்யலாம் என யோசித்து
எனக்கு நீ
பரிசளித்த பேனாவை
நினைவிருக்கிறதா?

-ஒளிப்பதிவாளர் எஸ்டி.விஜய்மில்டன்